Published : 31 Oct 2016 12:29 PM
Last Updated : 31 Oct 2016 12:29 PM
மூன்று தொகுதி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து 21.10.2016 அன்று மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டடம் நடைபெற்றது.
மூன்று தொகுதிகள்தான் என்றபோதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிற முறையிலும், இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது.
அதையே கூட்டத்திலும் வலியுறுத்தியது. ஆயினும் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக் கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டது.
இருப்பினும் கட்சி அணிகள் மற்றும் மாற்று அரசியலை விரும்புவோர் மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதையொட்டி 26.10.2016ல் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மக்கள் நலக் கூட்டணியின் முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட வலியுறுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT