Last Updated : 23 Oct, 2016 09:47 AM

 

Published : 23 Oct 2016 09:47 AM
Last Updated : 23 Oct 2016 09:47 AM

திருட்டை தடுக்க கூடுதல் கண்காணிப்பு: தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்

தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல் பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சென் னையில் தங்கியுள்ள வெளி மாவட்ட மக்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். வெளியூர் செல்பவர்களின் பூட்டப்பட்ட வீடுகளை குறிவைத்து கொள் ளையடிக்கும் சம்பவம் ஆங் காங்கே நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் திருட்டு தொடர்பாக கடந்த 2013-ல் 11 ஆயிரத்து 950 வழக்குகளும், 2014-ல் 11,969 வழக்குகளும் 2015-ல் 11,196 வழக்குகளும் பதியப் பட்டுள்ளன. இதில், பெரும்பாலான கொள்ளைகள் பூட்டிய வீடுகளை குறிவைத்தே நடந்துள்ளன. எனவே, தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வெளியூர் செல்லும் மற்றும் திரும்பி வரும் தேதிகளை காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டால் சம்பந்தப்பட்ட வீடுகளை ரோந்து போலீஸார் கண்காணித்து கூடுத லான பாதுகாப்பை மேற்கொள்வர். இதற்காக சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களிலும் ‘பூட்டியிருக்கும் வீடுகள்’ என்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வரு கிறது. அந்தப் பதிவேட்டில் வெளியூர் செல்லும் நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

பகல், இரவில் சுழற்சி முறையில் ரோந்து செல்லும் போலீஸார், தங்கள் பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளை தொடர்ந்து கண்காணிப்பர். இதன்மூலம் கொள்ளையர்களின் வியூகம் முறியடிக்கப்படும் என போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.

இதுகுறித்து, வட சென்னை சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் சி.தர் கூறியதாவது:

அனைத்து நாட்களிலும் இரவு, பகல் பாராது சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்டிகை, விழாக் காலங்களிலோ அல்லது மற்ற நேரங்களிலோ வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றால் அந்த வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்தும் தகவல் சொல்லலாம். கட்டுப்பாட்டு அறை போலீஸார், சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்த தகவலை தெரிவித்துவிடுவர். இதன்மூலம் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x