Published : 01 Oct 2016 02:13 PM
Last Updated : 01 Oct 2016 02:13 PM

விருதுநகர் மாவட்டத்தில் 5,013 பேர் வேட்புமனு தாக்கல்: அதிமுகவில் சீட் கொடுக்காததால் சுயேச்சையாக களமிறங்கும் தம்பதி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 5,013 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விருதுநகர் நகர்மன்ற உறுப் பினர் பதவிக்குப் போட்டியிட அதிமுகவில் சீட் கொடுக்காததால், அக்கட்சியை சேர்ந்த தம்பதி சுயேச்சையாக களமிறங்க நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று அமாவாசை தினத் தையொட்டி ஒரே நாளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட குமரன் (26-வது வார்டு), அவரது மனைவி இந்திரா (30-வது வார்டு) ஆகியோர் அதிமுகவில் விருப்பமனு அளித்தனர். இதில் இந்திராவுக்கு கடந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில், இம்முறை இருவருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த இருவரும் நேற்று சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே நேற்று அமாவாசை தினம் என்பதால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் திமுக வேட்பாளர்கள் கற்பகவள்ளி (13-வது வார்டு), தனலட்சுமி (18-வது வார்டு), பாஜக வேட்பாளர்கள் பிரபாகரன் (6-வது வார்டு), பிரான்ஸிஸ் (25-வது வார்டு), சுரேஷ்குமார் (26-வது வார்டு), காங்கிரஸ் வேட்பாளர்கள் மாலதி (24-வது வார்டு), வள்ளிகுட்டி ராஜா (25-வது வார்டு), செல்வரத்னா (15-வது வார்டு), ஜேசய்யா (22-வது வார்டு), நாகேந்திரன் (32-வது வார்டு), பேபி (30-வது வார்டு), பால்பாண்டி (16-வது வார்டு), ரம்யா (27-வது வார்டு), பாலகிருஷ்ணன் (26-வது வார்டு), ரமேஷ் (35-வது வார்டு), ராமலிங்கம் (31-வது வார்டு), தேமுதிக வேட்பாளர்கள் சிவக்குமார் (9-வது வார்டு), ஆனந்தவள்ளி (2-வது வார்டு), மரியபிரான்ஸிஸ் (22-வது வார்டு) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 9 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், ராஜபா ளையம், திருவில்லிபுத்தூர் நகராட்சிகளிலும், அருப்புக்கோட்டை, விருதுநகர் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், செட்டியார்பட்டி, சேத்தூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், எஸ்.கொடிக்குளம் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் ஏரா ளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 4,411 பதவியிடங்கள் உள்ளன. நேற்று மட்டும் 5,013 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 6,877 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x