Last Updated : 25 Aug, 2022 05:17 PM

 

Published : 25 Aug 2022 05:17 PM
Last Updated : 25 Aug 2022 05:17 PM

“தொகுதி மேம்பாட்டு நிதியை முழுதாக தரவிடாமல் தடுக்கும் சக்தி எது?” - புதுச்சேரி பேரவையில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆவேசம்

புதுச்சேரி: “சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத நிலைதான் புதுச்சேரியில் இருக்கிறது” என்று ஆளும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். இதில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ் பேசுகையில், "விளையாட்டுக்கு தனி துறை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய விளைாயாட்டுகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் மட்டுமல்லாது நகரப்பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைத்துதர வேண்டும்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எம்எல்ஏ-க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியை முதல்வர் அறிவித்திருந்தார். முதற்கட்டமாக ரூ.1.10 கோடி அரசாணை பிறக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. பிறகு ரூ.50 லட்சம் வழங்குவதற்கு முதல்வர், அமைச்சர் தயாராக இருந்ததும், அந்த நிதி கொடுக்க விடாமல் தடுக்கும் சக்தி எது? அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு ரூ.50 லட்சம் ஏன் வழங்கவில்லை. எங்களுடைய இடத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் இருந்து பாருங்கள். அப்புறம் தெரியும் எங்களுடைய வலி. சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத நிலைதான் புதுச்சேரியில் இருக்கிறது.

இப்பிரச்னையில் தலைமை செயலர் தலையிட வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர கூடாது. பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி கொடுப்பது மட்டும்தான் அரசின் வேலை. அதன்பிறகு ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள், அதை எப்படி செலவு செய்திருக்கிறார்கள் என்று துறை செயலர்கள், அதிகாரிகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணித்தால் மட்டுமே பணம் எல்லாம் முறையாக செலவு செய்யப்பட்டு மக்களை சென்றடையும்.

எங்களை ஆளுங்கட்சி எம்எல்ஏ என்று கூறலாம். ஆனால், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு நடப்பதுதான் எங்களுக்கும் நடக்கிறது. முதல்வர் பாரபட்சம் பார்ப்பதில்லை. எல்லா எம்எல்ஏவையும் அவர் ஒரே மாதிரிதான் பார்க்கிறார். மக்கள்தான் அவருக்கு முக்கியம். எனவே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தேவையானவற்றை முதல்வரிடம் கேட்டு பெறுங்கள்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x