தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கதலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குநர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.னிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை.

இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தற்போது பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

சட்டத்துறை உறுப்பினர் இருந்தால் மட்டுமே, மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முழுமையான முடிவெடுக்க முடியும். தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் 17.3.2022-ல் ராஜினாமா செய்தார். சட்டத்துறை உறுப்பினர் 5.5.2022-ல் ஓய்வு பெற்றார்.

இரு காலியிடங்களையும் ஒரே நேரத்தில் அரசு நிரப்பி இருக்கலாம். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை அமலில் இருக்கும். நியமனத்துக்கு பிறகு தடை நீங்கிவிடும். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தலாம். மனுதாரர்கள் தங்களின் ஆட்சேபம் மற்றும் கோரிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in