

கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அட்டவளை பாரதி நகர் கிராமம். இங்கு தாயகம் திரும்பிய மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்கள், கல்வி, மருத்துவம், அத்தியாவசிய தேவைகளுக்காக குன்னூர் அல்லது கோத்தகிரிக்கு செல்ல வேண்டும். இதற்கும் ஒரே ஒத்தையடிப் பாதை மட்டுமே உள்ளது.அதுவும் பாதி வரை மட்டுமே உள்ளதால், அங்கிருந்து மலை மீது ஏறி ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘அட்டவளை கிராமத்தில் இருந்து சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறோம். அத்தியாவசிய மற்றும் அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. பிரசவம் உள்ளிட்ட மருத்துவத் தேவைக்கும், அத்தியாவசிய தேவைக்கும் பல கிலோ மீட்டர்தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில்உள்ளோம். எங்கள் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் நடந்து செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே எங்கள் ஊருக்கு தார் சாலை அமைத்து கொடுக்க தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.