Published : 24 Aug 2022 04:54 PM
Last Updated : 24 Aug 2022 04:54 PM

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுவது எப்படி? - தமிழக அரசு விளக்கம்

சென்னை: "போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின்னர், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் கூறியது: "போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான 13-வது ஒப்பந்தம், 4.1.2018 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 31.8.2019 அன்றுடன் முடிவதால், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 7 கட்டங்களாக நடைபெற்று இன்று முடிவுற்று, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்த ஷரத்துகள்:

> அடிப்படை ஊதியமானது போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்ற நிரந்தர தொழிலாளர்களுக்கு 1.9.2019 அன்று கீழ்க்கண்டவாறு அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். 31.8.2019 அன்று பெற்று வந்த அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

> இடைக்கால நிவாரணம் 1.2.2001 முதல் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தது. மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த இடைக்கால நிவாரணமானது தற்போதைய ஒப்பந்தப்படி 1.1.2022 முதல் 31.7.2022 வரையிலான நிலுவைத்தொகையில் நேர் செய்யப்படும்.

> மகளிர் இலவச பயணத்திற்கான வசூல் பேட்டா வழங்கப்படாமல் இருக்கிறது என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல்படியில் ஏற்படும் இழப்பீடுகளை ஈடுசெய்து தற்போதுள்ள வசூல்படி இரட்டிப்பாக வழங்க அரசு உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

> பல்வேறு படிகளை உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையின்படி, சலுகைப்படி, தனி பேட்டா, ரிஸ்க் மற்றும் ஷிப்ட் அலவன்ஸ், இரவு பயண படி, இரவு தங்கல் படி, உள்ளிட்டவை உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.

> மலைப் பிரதேசங்களில் பணியாற்றுகின்ற வாகனப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்று ரூ.1500 வழங்கப்பட்டதை, ரூ.3000- ஆக உயர்ததி வழங்கப்படுகிறது.

> அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணை (Standing Order) நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

> ஓய்வூதியர்கள் குடும்பத்தினருக்கு பயண சலுகை வழங்கப்படும்.

> குடும்ப நல நிதி ஒவ்வொரு மாதமும் ரூ.60 பிடித்தம் செய்து இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்காக தொழிலாளர்களிடம் மாதம் ரூ.150 பிடித்தம் செய்யப்படும். இந்த உயர்வுகள் 1.9.2022 முதல் அமல்படுத்தப்படும்.

> கரோனா காலத்தில் பணிபுரிந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு பணிக்கு ரூ.300 வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x