தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் தலைவர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் தலைவர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.கடந்த ஆறு மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.

அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.மேலும், தேசிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், மாநில அல்லது மண்டல அளவிலான ஆணையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் எனக்கூறி, மனுவுக்கு ஆறு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in