அரசுப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்

அரசுப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பேடர அள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்செல்வி என்பவர் பணியாற்றுகிறார்.

கடந்த சுதந்திர தின விழாவின்போது, இவர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்து மற்றொரு ஆசிரியர் மூலம் கொடியை ஏற்றச் செய்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, கிறிஸ்தவ மதத்தில் குறிப்பிட்ட ஒரு மார்க்கத்தை தான் பின்பற்றுவதாகவும், அந்த மார்க்க விதிகளின்படி தங்கள் கடவுளைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்றும், அதனால் தேசியக் கொடியை ஏற்றவும், வணங்கவும் மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தேசியக் கொடியை அவமதித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேடர அள்ளி கிராம மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 16-ம் தேதி மனு அளித்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபாலுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் இதுகுறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பிய நிலையில், தேசியக் கொடி தொடர்பான சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் தமிழ்செல்விக்கு நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in