கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு | ஜிப்மர் ஆய்வறிக்கையை வழங்க நடவடிக்கை: விழுப்புரம் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு | ஜிப்மர் ஆய்வறிக்கையை வழங்க நடவடிக்கை: விழுப்புரம் நீதிமன்றம்
Updated on
1 min read

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்த வழக்கில், மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கைகளை வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், அறிக்கைகள் வழங்க நாளை நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடலூரைச் சேர்ந்த மாணவி மரணமடைந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இருமுறை நடந்த மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கையை ஜிப்மர் மருத்துவர் குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கையின் நகல்களை தங்களுக்கு வழங்க உத்தரவிடக் கோரி மாணவியின் தாயார் தரப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின் நகல்கள் நாளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மாணவி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், முதல் மற்றும் இரண்டாவது உடற்கூறு ஆய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வறிக்கையின் நகல்களை வழங்க கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தோம். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை அந்த நகல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in