Published : 23 Aug 2022 11:32 AM
Last Updated : 23 Aug 2022 11:32 AM

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஆக.25) சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், "கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "தனி நீதிபதி தனது அதிகாரத்தின் வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கின் கோரிக்கையே ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான், எனவே, ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு.

பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அது இயலாத காரியம். நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான சூழல் இல்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகளை தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று நேற்று இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.

இதன்படி இந்த வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், " இந்த வழக்கில், டெல்லி மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இபிஎஸ் தரப்பில் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஆக.25) தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x