Published : 31 Oct 2016 09:00 PM
Last Updated : 31 Oct 2016 09:00 PM

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு

தமிழகம் மற்றும் கேரளாவையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி இருப்பதால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக நன்றாகப் பெய்துள்ளது. அதிகபட்சமாக உடுமலைப்பேட்டை, வாடிப்பட்டியில் தலா 120 மி.மீ., பொள்ளாச்சியில் 110 மி.மீ., பேச்சிப்பாறையில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஒன்று இருப்பதால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருமயத்தில் 80 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பீளமேட்டில் தலா 70 மி.மீ., திருப்பூர், செந்துறை, மணியாச்சி, அவினாசி, அரிமளம், காரைக்குடி ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ., நத்தம், சோழவந்தான், சத்திரப்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், பழனி ஆகிய இடங்களில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது'' என்று எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x