Published : 16 Oct 2016 10:43 AM
Last Updated : 16 Oct 2016 10:43 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நேற்று மாலை 6.30 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். அப்போது அவரிடம் மனு ஒன்றையும் அளித்தனர்.
கனிமொழி தகவல்
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் என சட்டச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
அதுபோல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளது.
இதனால் காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம்.
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காவிரி பிரச்சினையை திமுக எழுப்பும். விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை யாரும் அரசியலாக்க வேண்டாம்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT