

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் விரைந்து துப்பு துலக்கி, கைது நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீஸார் 19 பேரை நேரில் அழைத்து டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் சிறப்பாக புலன் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக 7 பேரை விரைந்துகைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், வங்கிக் கொள்ளை வழக்கில் வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் அன்புமற்றும் அவருடைய தனிப்படையில் இடம் பெற்ற இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர்கள் விஜயகுமார் (அண்ணா நகர்), ராஜாராம் (கொளத்தூர்), குமார் (கோயம்பேடு), உதவி ஆணையர்கள் அருள் சந்தோஷ் முத்து (அரும்பாக்கம்), ரவிச்சந்திரன் (அண்ணா நகர்), காவல் ஆய்வாளர்கள் பரணிதரன் (அரும்பாக்கம் குற்றப்பிரிவு), பிரபு (சட்டம்-ஒழுங்கு), கோபாலகுரு (அண்ணா நகர் சட்டம்-ஒழுங்கு), பூபாலன் (சூளைமேடு சட்டம்-ஒழுங்கு), எஸ்ஐக்கள் நிர்மல்ராஜ், பன்னீர்செல்வம், பெனாசீர் பேகம், தலைமைக் காவலர் குழந்தைவேல், காவலர்கள் பிரித்விராஜ், சாலமோன்ராஜ், முகமது சலாவுதீன், மணிகண்ட ஐயப்பன் ஆகியோரை நேற்று நேரில் வரவழைத்து தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உடனிருந்தார்.