Published : 18 Jun 2014 10:00 AM
Last Updated : 18 Jun 2014 10:00 AM

பி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும்: 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம்

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுமார் 2100 பிஎட் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.

அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகள் எனில் 50 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகள் எனில் 90 சதவீத இடங்களும் கவுன்சலிங்கிற்கு வந்துவிடும். அதே நேரத்தில், தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போன்று, தனியார் கல்வியியல் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்குவதில்லை. அக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்பட்டுவிடும்.

கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்தான் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கை நடத்தி வந்தது. இந்த ஆண்டும் கவுன்சலிங் நடத்தும் பொறுப்பை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டு அதற்கான அரசாணை 21.5.2014 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திடீரென கவுன்சலிங் நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது போன்று பிஎட் கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் கவுன்சலிங் கட்டணத்தை கல்வியியல் பல்கலைக்கழகமே மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x