Published : 22 Aug 2022 06:19 PM
Last Updated : 22 Aug 2022 06:19 PM

அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் "வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தப்படும் மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம், இலவசமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 700 ஹெக்டேர் பரப்பில், 506 ஹெக்டேர் பரப்பில் இருந்த அன்னிய மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போன்ற அறிக்கை கடந்த முறையும் தாக்கல் செய்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் பணியை ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்க இரண்டு வாரங்கள் அரசுக்கு அவகாசம்" வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், நர்சரிகளில் அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x