

சென்னை: பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்திநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய விமான நிலையம்அமைய உள்ள பரந்தூர் கிராமத்தில், பல சர்வே எண்களில் அடங்கிய 73 ஏக்கரில், 1.17 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் 2-வது இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், 4 ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனத்துக்கு, தனி நபர்களால் கிரயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வே எண்களின் வழிகாட்டி மதிப்புரூ.11.39 லட்சம். ஆனால், ஆவணங்களில் சதுர அடி ரூ.150 என்றமதிப்பில், ஏக்கருக்கு ரூ.65.40லட்சம் வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த கிரயம் செய்யப்பட்ட நிலம், எந்த சர்வே எண்ணுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.
அங்கு விமான நிலையம் அமைக்கப்படும் நிலையில், அரசிடம் இருந்து அதிக இழப்பீடு பெறும் நோக்கில் இந்தப் பதிவுநடைபெற்றுள்ளது என்ற முடிவுக்குவர, வலுவான முகாந்திரம் உள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் 2020-ம் ஆண்டில், அதிமுகஆட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைப் பதிவு செய்த அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அதற்கு உதவிய உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஊழல் கண்காணிப்பு துறைக்கு கடிதம் எழுதப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.
தற்போது இதை சுட்டிக்காட்டி, ஆவணங்கள் அடிப்படையில் அதிக இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவறானது. அரசுக்கு இழப்புஏற்படாமலும், நில உரிமையாளர்களுக்கு சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலம் கையகப்படுத்தப்படும்போது, சரியான சந்தை மதிப்பை நிர்ணயம் செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகள், நில நிர்வாக ஆணையர் தலைமையிலான குழுவால் சரிபார்க்கப்படும். பின்னர், அந்த நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
மாநிலத்தில் எந்த நிலத்தின் மதிப்பையும் சரி செய்ய, பதிவுத் துறை தலைமையிலான மைய வழிகாட்டுக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. எனவே, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பதிவைக் காரணம் காட்டி, அரசு அதிக அளவில் பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது.
விமான நிலையம் அமைக்க நிலம்வழங்கும் விவசாயிகள் மற்றும்நில உடமைதாரர்களுக்கு, உரியமற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.