பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4,500 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், புதிய விமான நிலைய திட்டத்துக்காக இந்த கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களாக உள்ளன. இதனால், விமான நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதில், ஏகனாபுரம் மக்கள் தங்களின் குடியிருப்பு நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

இந்நிலையில், விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிராமப் பகுதியில் பேரணியாக சென்று கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in