சிவகாசி, கும்பகோணம் பட்டாசு விபத்து: பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

சிவகாசி, கும்பகோணம் பட்டாசு விபத்து: பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சிவகாசி, கும்பகோணம் பட்டாசு விபத்துகளில் பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியில் கடந்த 20-ம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரித்து வருகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சிவகாசியில் நடந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், விதிமீறல்களுமே காரணம். 2013-ம் ஆண்டில் திருவிடைமருதூரில் நடைபெற்ற பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்துக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என்பது குறித்து, அரசிடம் தகவல் கேட்டு தெரிவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்படுகிறது. இல்லையெனில் நாளை இழப்பீடு வழங்குவது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று மீண்டும் முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, "சிவகாசி பட்டாசு விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கும், 2013-ம் ஆண்டில் திருவிடைமருதூரில் நடைபெற்ற பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்த 10 பேரில் வனிதா என்ற பெண்ணைத் தவிர மற்ற 9 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இரண்டு விபத்துகளிலுமே எந்த தவறும் செய்யாமல் அப்பாவி மக்கள் உயிர் பறிபோனது. இதனால் இரண்டு விபத்துகளில் பலியான 18 பேர் குடும்பத்துக்கும் அரசு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

சிவகாசி பட்டாசு விபத்து வழக்கை மாவட்ட காவல்துறையே விசாரிக்கும். விசாரணையை மாவட்ட எஸ்.பி. மேற்பார்வை செய்வார்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஸ்கேன் மைய உரிமையாளரை கைது செய்ய தடை:

சிவகாசி பட்டாசு விபத்தில், தனியார் ஸ்கேன் மைய உரிமையாளரை மறு உத்தரவு வரும் வரை கைது செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைசன்ஸ் இல்லாமல் ஸ்கேன் மையம் நடத்திவந்ததால் ஸ்கேன் மைய உரிமையாளர் மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டும் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in