Published : 19 Aug 2022 06:35 PM
Last Updated : 19 Aug 2022 06:35 PM

அஸ்வினிக்கு கடனுதவி வழங்க தாமதம் ஏன்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: "நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி சேகருக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு ஆக.18-ம் தேதியன்று கடை (எண் 66) ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனை அவர் நிராகரித்துவிட்டார்" என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்துவரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள் தொடர்பாக சரியான தகவல்கள் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 1.5 கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்கள் பூஞ்சேரி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

> இதுவரையில் 54 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் 35 சாதி சான்றிதழ்கள் ஆறு முதியோர் உதவித்தொகை வாக்காளர் அடையாள அட்டைகள் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

> வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப்பட்ட 12 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதமும் அஸ்வினி சேகருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வங்கி கடன் ஆணைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அஸ்வினி சேகர் என்பவர் ரூபாய் 5 லட்சம் கடன் உதவி கோரியதன் பேரில் கடன் வழங்க அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தயார் நிலையில் இருந்தும், தன்னுடைய ரூ.5 லட்சத்திற்கான கடன் வழங்கும் ஆணையையும் சேர்த்து அனைத்து நபர்களுக்கும் ஒன்றாக வழங்கும்பட்சத்தில்தான் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததால், வங்கி கடன் ஓப்புதல் அளிக்கப்பட்ட இதர நபர்களுக்கும் ஆணைகள் வழங்கப்படுவது நிலுவையில் உள்ளன.

> அஸ்வினி சேகர் என்பவர் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திட இட ஒதுக்கீடு கோரியதன் பேரில் ஜூலை மாதத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தகுந்த கடைகள் வழங்க உத்தரவிட்டதன் பேரில் கடற்கரை பகுதி ஐந்து ரதம் பகுதி ஒத்தவடத் தெரு போன்ற இடங்களில் கடை வழங்க ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அஸ்வினி சேகர் என்பவர் கூறியவாறு கடை இருப்பிடம் அமையவில்லை. அவர் குறிப்பிட்டு கேட்கும் கடையானது ஏற்கெனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 17.08.22 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரியதன் அடிப்படையில் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு (ஆக.18) காலை கடை எண் 66 ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனையும் அவர் நிராகரித்துவிட்டார்.

> மேலும், புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசித்து வரும் 55 குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிடம் கட்டிக் கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.07.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

> செங்கல்பட்டு மாவட்ட பூஞ்சேரி கிராமத்தின் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.5 கோடி மதிப்பில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு வழங்க தயாராக உளஅள நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற செங்கல்பட்டு சார் ஆட்சியர் நேரிடையாக சென்று விவரங்களை எடுத்துகூறி உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி சேகர் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த ஆண்டு சென்றபோது அவமதிக்கப்பட்டார். இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிலையில், முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி சேகர் பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வைரலானது. அந்த வீடியோவில், அஸ்வினி," ஒன்றரை வருசமாகிறது, லோனும் தரவில்லை, வீடு கட்டித்தருவதாக கூறினார்கள் அதுவும் வரவில்லை. கழிவறை கட்டுவதற்காக செங்கல் எல்லாம் எடுத்து வைத்தனர். மறுபடியும் அந்த செங்கலை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். நம்பிக்கை எல்லாம் செத்து போய்விட்டது. கடை வைத்திருப்பவர்கள், ரோட்டில் சுற்றும் உங்களுக்கு கடை வேண்டுமா என்று கிண்டல் செய்கின்றனர்" என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x