Published : 19 Aug 2022 04:03 PM
Last Updated : 19 Aug 2022 04:03 PM

“வங்கிக் கணக்கில் ரூ. 6,000 செலுத்துவது இலவசம் இல்லையா?” - பிரதமர் மோடிக்கு சீமான் கேள்வி

சென்னை: "வேளாண் குடிமக்கள் வாழவே முடியாத கடுமையான திட்டத்தை கொண்டுவந்துவிட்டு, 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறுவது இலவசம் இல்லையா? இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சீன உளவுக் கப்பல் ஆய்வுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். ஆய்வு என்றாலும், உளவு என்றாலும் ஒன்றுதானே. ஹம்பன்தொட்டாவில் இலங்கை கடல்பகுதியில் வந்துதான் சீனா ஆய்வு செய்ய வேண்டுமா, அவர்கள் நாட்டின் எல்லையில் இருந்து ஆய்வு செய்ய மாட்டார்களா? எந்த நாட்டை ஆய்வு செய்கின்றனர், அமெரிக்காவையா? பாகிஸ்தானையா? இந்தியா என்ன செய்கிறது என்பதை ஆய்வு செய்யதான் இந்த ஆய்வு.

இதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று கூறிய பிறகும், இலங்கை அனுமதிக்கிறது. இலங்கை மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. மாறாக, இலங்கைக்கு உளவு விமானத்தை கொடுக்கிறது இந்தியா. அது யாரை உளவு பார்க்கும்? சீனா பெரிய கப்பலை நிறுத்தி ஆய்வு செய்கிறது. இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்று இலங்கை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எதற்காக உளவு விமானத்தை பரிசாக கொடுக்கிறீர்கள்?

இலங்கை எப்படி நம்மை மதிக்கும். அவர்கள் சீனாவின் அடிமையாக மாறிவிட்டனர். இது எவ்வளவு பெரிய பேராபத்து. இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இன்னும் சிங்களர்களை நம்பிக்கொண்டிருப்பது போன்ற பேராபத்து எதுவும் கிடையாது.

8 ஆண்டுகளாக பாஜக ஏன் இலவசங்கள் குறித்து பேசவில்லை. டெல்லியில் குறுகிய காலத்தில் ஆட்சிக்குவந்த அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பள்ளிகளை 5 நட்சத்திர விடுதிபோல் மாற்றி, அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டியுள்ளார். அருகில் உள்ள கேரளாவில், 30 விழுக்காடு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. தனியார் பள்ளிகள் நோக்கி படையெடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தரமான கல்வியை இலவசமாக கொடுத்ததால்தான் அரவிந்த கெஜ்ரிவாலை டெல்லியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

குஜராத்தை 3 முறை ஆட்சி செய்த நீங்கள் செய்யவில்லை. அதை செய்வேன் அரவிந்த கெஜ்ரிவால் சொல்வதால், இலவசங்கள் கூடாது என்று பாஜக கூறுகிறது. பிறகு எதற்கு விவசாயிகள் வங்கி கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக கூறினீர்கள். அது என்னது? அது இலவசம் இல்லையா?

வேளாண் குடிமக்கள் வாழவே முடியாத கடுமையான திட்டத்தை கொண்டுவந்துவிட்டு, 6 ஆயிரும் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறுவது இலவசம் இல்லையா? இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x