Published : 19 Aug 2022 02:44 PM
Last Updated : 19 Aug 2022 02:44 PM

‘‘உக்ரைனில் படித்த மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மா.சுப்பிரமணியம்

மதுரை; ‘‘உக்ரைனில் படித்த மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: "அரசு மருத்துவமனைகளில் மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க விரைவில் 4,300 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 200 வகையான பணி நியமனம் நடக்க உள்ளது. அதில் 2 வகையான பணி நியமனம் முடித்தாகிவிட்டது. 10 நாட்களில் முதலமைச்சரின் மூலம் 707 மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்கள், பீல்டு அசிட்டெண்ட்டுகள் நியமிக்கப்பட உள்ளனர். செப்டம்பர் இறுதிக்குள் முழுமையான பணி நியமனம் முடிக்கப்பட உள்ளது.

கடந்த வாரம் தான் தமிழக அரசியலில் மழைக்கால நோய்களை தடுக்க முதல் முறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை, நகர்புற உள்ளாட்சித்துறை, ஊரக உள்ளாட்சித் துறை ஆகிய மூன்று துறைகளும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. நான் உள்பட மூன்று துறை அமைச்சர்களும் கலந்து கொண்டு டெங்கு, மலேரியா, டைபாய்டு பான்ற பல்வேறு நோய்களைில் இருந்து மக்களை காக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்று ஆலோசனை செய்தோம்.

அந்த வகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள இந்த மூன்று துறை அதிகாரிகள், அலுவலர்கள் கூடி பேசி மழைக்கால நோய்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள். களப்பணியார்களை முடுக்கி விட்டுள்ளா்கள்.

தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. எங்கேயாவது அப்படி ஒரு புகார் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த மருத்துவமனைகளில் அவசியமான தேவையான மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரமும் அவர்களிடம் உள்ளது. குறிப்பாக இன்சூரன்ஸ் திட்ட நிதியும் அதற்காகதான் அவர்கள் வைத்துள்ளனர். மருந்துகள் தட்டுப்பாடு திடீரென்று புனையப்பட்ட கற்பனை கதை. கரோனா காலக் கட்டத்தில் 4 வகை மருந்துகள் தட்டுப்பாடு இருந்தது. தற்பாது அந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை.

உக்ரைனில் படித்த மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் ஆலோசனைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் பாடப்பிரிவு போல் உள்ள மற்ற நாடுகளில் அந்த மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அடுத்த வாரம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கும்போது இந்த கோரிக்கையை வைத்துள்ளோம்.

நீட் விலக்கு என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சமீபத்தில் ஒரு சில விளக்கங்கள் கேட்டு அனுப்பியிருந்தார்கள். அதற்கு பதில் அளித்து அனுப்பி விட்டோம். இனிமேல் குடியரசு தலைவரும், உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் மட்டுமே கிடைக்க வேண்டும். அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x