Published : 19 Aug 2022 04:30 AM
Last Updated : 19 Aug 2022 04:30 AM

கூடலூர் பகுதிகளில் சூழல் மண்டலங்கள் உருவாக்க வலுக்கும் எதிர்ப்பு

உதகை

தமிழகத்தில் சூழல் மண்டலங்கள் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் போராட்டங்கள் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சூழல் மண்டலம் உருவாக்க வேண்டுமென, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் 1 கி.மீ. அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்கக்கூடாது.

சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சூழல் மண்டலங்களிலுள்ள கட்டுமானங்கள் குறித்த பட்டியலை தயாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஒவ்வொரு மாநில தலைமை வனப்பாதுகாவலர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மலைப் பிரதேசம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனத்தை கொண்ட பகுதி. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், பாதுகாக்கப்பட்ட வனத்தில் எல்லையோரம் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள மசினகுடி, கூடலூரில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "பல ஆண்டுகளாக வசிக்கும் நிலையில், பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சமாக உள்ளது. எனவே, அரசு தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

இதற்கிடையே, சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடலூரில் போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது.

வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "வனங்களிலிருந்து விலங்குகள் வெளியேறும் பகுதிகளில், மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க, அனைத்து மாநிலங்களிலும் சூழல் மண்டலங்களை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கெங்கு சூழல் மண்டலங்கள் உருவாக்குவது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்கள் வனத்தை ஒட்டி உள்ளன. பழவேற்காட்டை ஒட்டி 13 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் எங்கு அமைப்பது என ஆலோசித்து முடிவு செய்யப்படும். சூழல் மண்டலங்கள் அமைப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x