Published : 18 Aug 2022 06:26 AM
Last Updated : 18 Aug 2022 06:26 AM

சீமைக்கருவேல மர வழக்குகள் வனப் பாதுகாப்பு அமர்வுக்கு  மாற்றி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை, வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதனடிப்படையில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு, தமிழகத்தில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதால், சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரும் வழக்குகளையும் அந்த அமர்வுக்கே மாற்றி, கண்காணிக்க உத்தரவிடலாம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் சீமைக்கருவேல மரங்களைக் காணமுடிகிறது. அந்த மரங்களை வேருடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்குகளை, வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x