Published : 18 Aug 2022 06:21 AM
Last Updated : 18 Aug 2022 06:21 AM

தமிழகத்தில் மின்திட்டங்களை செயல்படுத்த 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் புதிய மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர் அந்தஸ்தில் உள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தொகுதிவாரியாக செய்யப்பட உள்ள புதிய பணிகளை, குறிப்பாக, துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றை இந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வர்.

இந்த ஆண்டு ரூ.2,300 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எவ்வித வித்தியாசமும் பாராமல், அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய மின்திட்டங்களைக் கேட்டறிந்து செயல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பதவியேற்ற கடந்த ஓராண்டில், தமிழகம் முழுவதும் 28,085 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். இந்த ஆண்டு காற்றாலை, சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதையும் மின்வாரியம் பயன்படுத்தியது.

இவ்வாறு பயன்படுத்தியது இதுவே முதல்முறை. இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் கூட வீணாகவில்லை என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x