Published : 17 Aug 2022 04:17 PM
Last Updated : 17 Aug 2022 04:17 PM

ஜாமீன் மனுவை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சின்ன சேலம் பள்ளித் தாளாளர் ரவிக்குமார் மனு

சென்னை: கனியாமூர் மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சின்ன சேலம் பள்ளியின் தாளாளர் ஈ.சி.ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சின்ன சேலம் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டு, ஜூலை 17ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது என சிபிசிஐடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், பள்ளியின் தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி எனது ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்காமல் எனது மனுவை விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவி மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 29-ம் தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிடக் கூடாது என சிபிசிஐடி சார்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி மரணம் தொடர்பாக ஆகஸ்ட் 29-ம் தேதி காவல் துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை பொறுத்து, ரவிக்குமார் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x