கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

பெட்ரோல் இல்லை என வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை
பெட்ரோல் இல்லை என வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை
Updated on
1 min read

கொடைக்கானல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.

கொடைக்கானலுக்கு ஆக.13 முதல் ஆக.15 வரை என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பினர். சுற்றுலா பயணிகள் வருகை, உள்ளூர் மக்களின் தேவை காரணமாக இங்குள்ள 3 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதலே ஏற்பட்ட தட்டுப்பாடால், சுற்றுலா பயணிகள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கொடைக்கானலிலேயே தங்கினர்.

பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்ற அறிவிப்பு சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்தது. கோவையில் இருந்து பெட்ரோல், டீசல் வந்தால் மட்டுமே நிலைமை சரியாகும் என்ற நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையால் வழக்கத்தை விட கூடுதலாக பெட்ரோல், டீசல் விற்பனையானது. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் சரிவர பெட்ரோல், டீசல் வழங்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in