Published : 17 Aug 2022 06:05 AM
Last Updated : 17 Aug 2022 06:05 AM

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா முழு மதிப்பெண் பெற்றார்

சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா உட்பட 133 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைபடிப்புகளுக்கு 1.48 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர 2 லட்சத்து 11,905 பேர் இணையதள வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதில், 1 லட்சத்து 58,157 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் நேற்று வெளியிட்டார்.

அதில் முதல் 10 இடங்களை கே.ரெஞ்சிதா (கொல்லம்), எம்.ஹரினிகா (தருமபுரி), எம்.லோகேஷ் கண்ணன் (திருவள்ளூர்), எச்.அஜய் (கோவை), ஜி.கோபி (புதுக்கோட்டை), டி.பிரதீக்‌ஷா (கோவை), பி.பவித்ரா (சென்னை), ஜெ.ஹரிகுரு (நாமக்கல்), எம்.மதுபாலிகா (செங்கல்பட்டு), கே.ஷாருகேஷ் (மதுரை) ஆகியோர் பிடித்துள்ளனர்.

பி.பிருந்தா

அரசுப் பள்ளி பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த பி.பிருந்தா, 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆர்.எஸ்.ரோகித் (198.5), எம்.அனிதா (198) ஆகியோர் 2, 3-ம் இடங்களில் உள்ளனர். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 133 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் பெற்றுள்ளனர். மாணவர்கள் தரவரிசை விவரங்களை www.tneaonline.org என்றஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வழக்கமாக, ஒரே மாதிரி கட்ஆஃப்வந்தால் சமவாய்ப்பு (ரேண்டம்) எண்பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு அதுபோன்ற நிலை இல்லாததால் ரேண்டம் எண் பயன்படுத்தப்படவில்லை.

எவர் பெயரேனும் விடுபட்டிருந்தால் அதன் விவரங்களை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் அருகே உள்ள டிஎப்சி உதவி மையங்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசின் 18004250110 என்ற இலவசதொலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவருக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கதவறியவர்களும் ஆகஸ்ட் 19-க்குள் டிஎப்சி மையத்தை அணுகலாம்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரைநடக்க உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 10,968 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதல்வர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு 17-ம்தேதி (இன்று) நடக்க இருந்தது. முதல்வரின் டெல்லி பயணம் காரணமாக மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் க.லட்சுமி பிரியா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x