Last Updated : 16 Aug, 2022 06:15 PM

 

Published : 16 Aug 2022 06:15 PM
Last Updated : 16 Aug 2022 06:15 PM

நிதியமைச்சர் கார் மீதான காலணி வீச்சு சம்பவம்: பாஜக மகளிர் அணியினர் 3 பேர் சிறையில் அடைப்பு

சரண்யா, தெய்வானை, தனலட்சுமி.

மதுரை: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை வீசிய சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை மாவட்டம், து. புதுப்பட்டி ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கடந்த சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது, அரசின் விதிமுறைப்படி, ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமான நிலைய வளாகத்திற்கு வந்தபோது, சலசலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தைவிட்டு அமைச்சர் வெளியே காரில் வந்தபோது, அவரது வாகனத்தை திடீரென வழிமறித்த பாஜகவினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், கூட்டத்தில் இருந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தனது காலணி எடுத்து அமைச்சர் கார் மீது வீசினார்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அங்கிருந்தவர்களை அப்புறபடுத்தி, அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் பாஜக பெண் நிர்வாகி உட்பட 40-க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தார்.

இவர்களில் பாஜகவைச் சேர்ந்த மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் (48), பிரச்சார பிரிவு செயலர் பாலா (எ) பாலசுப்பிரமணியன் (49), திருச்சியைச் சேர்ந்த பாஜக கட்சி நிர்வாகி ஜெயகருணா (39), கோபிநாத், (42), மற்றொரு கோபிநாத் (44), முகமது யாகூப் ( 42), முன்னாள் மாநகராட்சி மண்டலத் தலைவரும், தற்போது மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் (55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அமைச்சரின் கார் மீது காலணியை வீசி பெண் நிர்வாகி உள்ளிட்டோர் குறித்து சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வைத்து துணை காவல் ஆணையர் சீனிவாச பெருமாள் தலைமையில் காவல் ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர்.

அமைச்சரின் கார் மீது காலணியை வீசியவர்கள் மதுரை மாநகர மாவட்ட மகளிர் அணி செயலரான விளாங்குடி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த சரண்யா (38), மற்றும் தெய்வானை என்பதும், அவர்களுக்கு உடந்தையாக பாஜக மகளிரணியைச் சேர்ந்த மதுரை முடக்குச்சாலை நேதாஜி நகரைச் சேர்ந்த தனலட்சுமி (48) இருந்ததும் தெரியவந்தது. தலைமறைவான அவர்களை தனிப்படையினர் தொடர்ந்து தேடினர். அவர்களின் செல்போன் டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிந்து, தனிப்படையினர் நேற்று அங்கு விரைந்தனர். பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதன்பிற்கு இன்று சரண்யா உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 3 பேருடன் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x