Published : 16 Aug 2022 06:10 PM
Last Updated : 16 Aug 2022 06:10 PM

‘சாதி - மதம் அற்றவர்’ என சான்றிதழ் கோரியவருக்கு 2 வாரங்களில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘சாதி - மதம் அற்றவர்’ என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்கவுள்ளேன். எனவே எனது மகனுக்கு சாதி - மதம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன்.

ஆனால், அவ்வாறு சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே, எனது மகனுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற வகையில் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தாரர் அளித்த கடிதத்தை தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் சாதி - மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x