

திருப்பதி பிரம்மோச்சவத்தை முன்னிட்டு அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கும், ரேணிகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதியில் நடக்கவுள்ள பிரம்மோச்சவத்தை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, 5-ம் தேதி (நேற்று) முதல் வரும் 12-ம் தேதி வரையில் அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (05601) திருத்தனி வழியாக மாலை 5 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் வரும் 12-ம் தேதி வரையில் மொத்தம் 8 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (05602) இரவு 9.25 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் நேற்றும், இன்றும் இயக்கப்படுகிறது.
இதேபோல், வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (05604) அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இரவு 9.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு சிறப்பு ரயில் (05603) மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது (2 சர்வீஸ்) இயக்கப்படுகிறது. இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது (6 சர்வீஸ்) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களும் முன்பதிவு இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.