Published : 14 Aug 2022 03:40 PM
Last Updated : 14 Aug 2022 03:40 PM

சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார்: முத்தரசன் இரங்கல் 

சரோஜ் நாராயண்சுவாமி

சென்னை: சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அகில இந்திய வானொலியின் மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி (87) நேற்றிரவு மும்பையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம்.

காலை கண் விழித்ததும், வானொலியை இயக்கி, செய்தி கேட்க காதுகளை திறந்து வைக்கும் லட்சோப, லட்சம் நேயர்களின் நெஞ்சங்களில் குடியிருப்பவர் சரோஜ் நாராயண்சுவாமி. 'ஆகாச வாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி' என்ற அந்தக் காந்தக் குரலை கேட்டதும் நிமர்ந்து உட்கார்ந்து, தெளிவான, பிசிறில்லாத உச்சரிப்பில் நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்வதில் ஒரு மன நிறைவும், தெளிவும் கிடைக்கும் என்பதை அனைவரும் ஏற்பர்.

இன்று நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட போதிலும் சரோஜ் நாராயண்சுவாமி பல காலம் வாசித்த செய்தி காற்றில் கலந்து நிற்பது போல், நேயர்கள் நினைவில் அவர் என்றென்றும் வாழ்ந்திருப்பார்.

காந்தக் குரல் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னானரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், வானொலி நேயர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x