கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் வட்டியுடன் இழப்பீடு- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் வட்டியுடன் இழப்பீடு- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 8 முதல் 8.7 சதவீத வட்டியுடன் இழப்பீடு 4 வாரங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

கும்பகோணம் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். பல குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கொடுங்காயம் ஏற்பட்ட 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், காயமடைந்த மேலும் 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு அளவில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பரிந்துரை செய்தார். மேலும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த நாள் முதல் இந்த தொகைக்கு 6 சதவீத வட்டி வழங்க வேண்டுமெனக் கூறி அறிக்கை சமர்ப்பித்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ. 25 லட்சமும், காயமடைந்த குழந்தை களுக்கு ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டுமென கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கம் சார்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இழப்பீட்டுக்கான வட்டியை 9 சதவீதமாக உயர்த்தி, அதை சம்பவம் நடந்த தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதை தமிழக அரசும் பரிசீலிப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் கோரியுள்ளபடி சம்பவம் நடந்த தேதியில் இருந்து கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகைக்கு வட்டி வழங்குவதாகவும், ஆனால் வட்டியை 9 சதவீதம் என்பதற்குப் பதிலாக சற்று குறைத்து வழங்குவதாகவும் பதில் மனு தாக்கல் செய்தார். அதன்படி 2004 முதல் 2011 வரை 8 சதவீத வட்டியும், 2011-12 காலகட்டத்துக்கு 8.6 சதவீதமும், 2012 முதல் தற்போது வரை 8.7 சதவீதமும் வட்டி கணக்கிடப்பட்டு 4 வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

கும்பகோணம் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். பல குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in