Published : 14 Aug 2022 06:40 AM
Last Updated : 14 Aug 2022 06:40 AM

மாநகர பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும் - போக்குவரத்துக் கழகம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளை குறித்த நேரத்தில் முழுமையாக இயக்க வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தினமும் 3,233 பேருந்துகளை அட்டவணையிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

கடந்த காலத்தில் கரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை, இயக்கம் குறைக்கப்பட்டது.

தற்போது கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு விலக்கி கொண்டதை அடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனால், அவர்களது போக்குவரத்து தேவையும் பெருமளவு அதிகரித்து, கரோனா காலத்துக்கு முன்பு இருந்தவாறு நமது பேருந்துகளை தினமும் சராசரியாக 30 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில், பல பணிமனைகளில் பேருந்துகள், குறிப்பாக சாதாரண கட்டண பேருந்துகள், அட்டவணைப்படி முழுமையாக இயக்கப்படாததால், மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளாவதுடன், அரசுக்கும், மாநகர போக்குவரத்து கழகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது.

எனவே, அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களும் தேவையின்றி பணிக்கு வராமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். பணி ஒதுக்கீட்டின்படி, பேருந்துகளை குறித்த நேரத்தில் முழுமையாக இயக்க வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கடைசி பேருந்து, இரவு நேர பேருந்து, இரவு வெளித்தங்கல் பேருந்து உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x