மத்திய அரசு விருது | “என் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்” - ஆயக்குடி இன்ஸ்பெக்டர் கே.அமுதா

கே.அமுதா
கே.அமுதா
Updated on
1 min read

சிறப்பு புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது கிடைத்ததை எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன் என ஆயக்குடி இன்ஸ்பெக்டர் கே.அமுதா தெரிவித்தார்.

பழநி அருகே உள்ள ஆயக்குடி இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் கே.அமுதா. இவரது சிறந்த பணிக்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இது குறித்து அவர் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்குகள், அவற்றில் எத்தனை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது ஆகிய விவரங்களை சேகரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஐந்து பேரை மத்திய அரசு விருதுக்குப் பரி்ந்துரை செய்தனர்.

போக்ஸோ, கஞ்சா, கொலை என 2020-21-ம் ஆண்டில் அதிக வழக்குகளை விசாரித்ததோடு மட்டுமின்றி, அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தந்துள்ளேன். வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அவற்றுக்கு தண்டனை பெற்றுத் தந்தது ஆகியற்றின் அடிப்படையில் இந்த விருதை வழங்கியுள்ளனர்.

நான் பணிபுரியும் காவல் நிலையத்துக்குச் சென்றால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்தினேன். பணியில் சேர்ந்தது முதல் மாவட்ட அளவில் கூட இதுவரை ஒரு விருது கூட பெற்றதில்லை. எனது உழைப்புக்கு என்றாவது ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பினேன். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. தற்போது மத் திய அரசு மூலம் கிடைத்துள்ள இந்த விருது என்ற அங்கீகாரம் என்னை மேலும் கடமையுடன் பணியாற்றத் தூண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in