Last Updated : 14 Aug, 2022 02:48 AM

 

Published : 14 Aug 2022 02:48 AM
Last Updated : 14 Aug 2022 02:48 AM

4 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான் - புகழேந்தி குற்றச்சாட்டு

நாமக்கல்: கடந்த நான்கு ஆண்டும் தங்கமணியும், வேலுமணியும் தான் முதல்வராக செயல்பட்டனர் என புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.

திருச்செங்கோட்டில் அதிமுக ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ் பிரிவு அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் எம்.பி.ஜெயமுருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகி வா. புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் விளையாடுவதற்காக ஒரு பொம்மையாக பயன்படுத்தப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. நான்கு ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இல்லை. நான்கு ஆண்டும் முதலமைச்சராக செயல்பட்டவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்கு உடன் நின்றவர்கள் தங்கமணியும், வேலுமணியும் முக்கியமானவர்கள். இந்த செயலலை கட்சி தொண்டர்களும் சரி மக்களும் சரி எழுச்சியுடன் கூர்ந்து கவனித்து வருகின்றனர். ஓபிஎஸ் தான் இந்த கட்சியை வழிநடத்தி செல்வார். அதிமுகவின் ஒப்பற்ற தலைவராக வழி நடத்தக்கூடியவராக ஓபிஎஸ் அவர்களை உருவாக்கி அவர் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இதற்காக தங்கமணிக்கும், வேலுமணிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என இருக்கும் விதியை மீறி அப்படி செய்தால் என்ன என கேட்ட ஒரே முதல்வர் பழனிச்சாமி தான். ரூ.4,800 கோடி ஊழல் சிபிஐ விசாரணை வேண்டாம். ஆனால் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமாம்.

கடந்த நான்கு ஆண்டுகள் ஊழல் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. துவரம் பருப்பில் கிலோ ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் கமிஷன், ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் டன்னுக்கு கமிஷன். அப்படியெனில் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். சர்க்கரையில் கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு, 37 ரூபாய் சக்கரையை 47 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

நிலக்கரி மற்றும் டாஸ்மாக்கில் தங்கமணி ஹீரோவாக செயல்பட்டு ஊழல் செய்துள்ளார். கரோனா காலத்தில் டாஸ்மாக்கை திறந்து வைத்து வல்லமையுடன் கொள்ளையடித்தவர் தங்கமணி. டாஸ்மாக் ஊழல் வெளிவரும். 12 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலே நடத்தாமல் ஊழல் செய்தவர் வேலுமணி.

கொசு மருந்திலிருந்து மெட்ரோ வரைக்கும் அனைத்திலும் ஊழல் செய்தவர் வேலுமணி. செவிலியர்களுக்கான பணியிடமாற்றத்திற்கு லஞ்சம் பெற்றவர் விஜயபாஸ்கர். ஓபிஎஸ்ஸால் தான் கட்சியை நடத்த முடியும். ஜெயிலில் உட்கார்ந்து கொண்டு எடப்பாடி எப்படி கட்சி நடத்துவார்.

ஐந்தாறு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வரப்போகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பொன்னையன் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டார். பொன்னையன் சொன்னது போல் நம்மால் சொல்ல முடியாது. ஓபிஎஸ் அணிக்கு பொன்னையன் வருவார். இங்கே தான் இருக்கப் போகிறார். அது நடக்கத்தான் போகிறது. அதிமுக இயக்கம் ஜாதியின் பின்னால் போனதில்லை.

இப்பொழுது ஜாதி அமைப்பாக அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா இணைந்து செயல்படுவது குறித்து காலம் பதில் சொல்லும். தேர்தல் வரும் போது நல்ல முடிவு வரும். அணி இரண்டாகவே இருந்து எடப்பாடி பழனிச்சாமி அணி வாக்கு கேட்க சென்றால் மக்கள் அவர்கள் கதையை முடித்து விடுவார்கள். எடப்பாடி துரோகி என நினைத்து மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x