அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு முறைமன்ற நடுவம் உத்தரவு 

அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு முறைமன்ற நடுவம் உத்தரவு 
Updated on
1 min read

சென்னை: அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டையைச் சேர்ந்த விஜயன் மற்றும் விஜயக்குமார் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவத்திற்கு அனுப்பி உள்ள மனுவில், "சென்னை மாநகராட்சி, மணலி மண்டத்தில் 6-வது வார்டில் சடையங்குப்பம் கிராம் டிகேபி நகரில் உள்ள ஜானகிராமன் ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து அதிக அளவு புகை வெளியாகி காற்று மாசு ஏற்படுகிறது. குடியிருப்பு இடங்களில் சாம்பல் படிந்து விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கும்போது மட்டும் புகையின் அளவைக் குறைத்தும், மற்ற நேரங்களில் விதிகளை மீறியும் காற்று மாசு ஏற்படுத்துகின்றனர். அதிகாரிகள் தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கு மறைமுக ஆதரவு தருகின்றனர். எனவே, இந்த மனுவை விசாரித்து உரிய ஆணைய பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த முறைமன்ற நடுவர், அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் முழு விவரம்:

  • காற்று மாசு, சாம்பல் படிவது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் மணலி மண்டல அலுவலர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் முறைமன்ற நடுவத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தூயக் காற்று, நீரை பெறுவது மனிதர்களின் அடிப்படை உரிமையாகும்.
  • இதன்படி அப்பகுதி மக்களுக்கு அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை மற்றும் சுகாதாரத்தை உறுதி மணலி மண்டல அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
  • தொழிற்சாலையை அடிக்கடி ஆய்வு செய்து மணலி மண்டல அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தூயக் காற்று, நீரை உறுதி செய்ய அடிக்கடி தொழிற்சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.
  • ஆய்வின் படி தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளின் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கும் அலுவலர்கள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in