பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த கேரளா தொடர்ந்து தடை: மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் மனு

மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் மனு கொடுக்கும் தமிழக விவசாயிகள்.
மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் மனு கொடுக்கும் தமிழக விவசாயிகள்.
Updated on
1 min read

கூடலூர்: தேக்கடியில் நடைபெற்ற உலக யானைகள் தின விழாவில் பங்கேற்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வந்திருந்தார். அவரிடம் பாரதீய கிஷான் சங்க மாவட்டத் தலைவர் எம். சதீஷ்பாபு மனு அளித்தார்.

அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு குறித்து 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் 142 அடிக்கு நீர்மட்டத்தை நிலைநிறுத்தவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது. ஆனால் பேபி அணையைப் பலப்படுத்த இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கான உத்தரவை கடந்த 8 ஆண்டுகளாக கேரள அரசு தர மறுத்து வருகிறது.

இதனால் அணையைப் பலப்படுத்த முடியவில்லை. கட்டுமான பொருட்களை அணைக்கு கொண்டு செல்லும் வல்லக்கடவு பாதையும் சிதிலமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்கவும் கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வின் போது கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.கொடியரசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.சிவனாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in