Published : 12 Aug 2022 01:10 PM
Last Updated : 12 Aug 2022 01:10 PM

பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பால் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும்.

தமிழகத்தில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 - 56, ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகம் ஆகும்.

அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது; பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x