டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை கூடாது: எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை கூடாது: எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில்முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி, எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

பின்னர், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில், திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை திரும்பப் பெற்று, குற்றவியல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோர் தரப்பில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அப்போது, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில்கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று வேலுமணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, வேலுமணி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஆனால் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in