

சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக. 13) மாலை தொடங்கிவைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி-முத்தாத்தாள் தம்பதிக்குப் பிறந்த வேலுநாச்சியார், சிறு வயதிலேயே போர்ப் பயிற்சிகளை கற்றுத்தேர்ந்தார்.
1772-ல் ஆங்கிலேயப் படையெடுப்பில் கணவரை இழந்தஇவர், மருது சகோதரர்கள், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் உதவியுடன் மக்களைத் திரட்டி, 7 ஆண்டுகள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு, சிவகங்கைச் சீமையை மீட்டார்.
1789 வரை சிவகங்கையை ஆட்சி செய்த வேலுநாச்சியார், தனது படையில் பெண்களுக்கென்று தனிப் பிரிவை உருவாக்கினார். இவரது போர்ப்படை தளபதி ‘குயிலி’, ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்தில் தனதுஇன்னுயிரையே ஆயுதமாக ஏந்தினார். வீரமங்கை வேலுநாச்சியார் 1896 டிசம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார்.
இவரைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடகம், சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டிய நாடகத்தை தொடங்கிவைத்துப் பார்வையிடுகிறார்.
கலைப் பண்பாட்டுத் துறை, ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இதில், 62 நாடகக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, வரும் 15-ம் தேதி ஈரோடு சிஎன்சி கல்லூரி, 21-ம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றம், 22-ம் தேதி திருச்சி கலையரங்கு, 28-ம் தேதி கோவை இந்துஸ்தான் கல்லூரி அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியைக் காண அனுமதிஇலவசம்.