Published : 11 Aug 2022 09:05 AM
Last Updated : 11 Aug 2022 09:05 AM

சின்னசேலம் வன்முறை: அப்பாவிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற டிஜிபி அலுவலகத்தில் மனு

சின்னசேலம் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட உறவினர்கள். சம்பந்தப்பட்ட கலவரத்தில் தொடர்பில்லாத தங்களின் உறவுகளை விடுதலை செய்ய கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். படம் : ம.பிரபு

சின்னசேலம் தனியார் பள்ளி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அப்பாவிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை போலீஸார் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் நேற்று நேரில் மனு அளித்தனர்.

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவர் படித்த பள்ளியை சூறையாடிய வழக்கில் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீஸார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிலர் நேற்று சென்னை வந்து, டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த மனு தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சின்னசேலம் தனியார் பள்ளியை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வை எழுத சென்றவர்கள். மருத்துவமனைக்கு சென்றவர்கள் ஆவார்கள். இப்படி பல அப்பாவி மக்களும் போலீஸாரின் பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவரது தந்தை இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கில் கூட அந்த நபர் பங்கேற்க முடியவில்லை. இன்னொருவரின் தாயார் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இப்படி நடை பிணமாக அவர்கள் இருந்து வருகிறார்கள். விவசாயம் செய்ய விதை வாங்க சென்றவர்கள், பெட்ரோல் பங்குகளுக்கு சென்றவர்கள் என இயல்பான நடைமுறையில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

என்ன வன்முறை என்பதே தெரியாமல் கைது செய்யப்பட்டோரும் உண்டு. இது தொடர்பான மனுவை டி.ஜி.பி.யிடம் கொடுத்தோம். அவர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரில் கிட்டத்தட்ட 100 பேர் அப்பாவிகளாக இருக்கிறார்கள்.

தமிழக அரசு இதில் தலையிட்டு, உண்மை நிலையை ஆராய்ந்து தவறு செய்யாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மேலும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கில் இருந்து விடுவிப்பதுடன், உரிய நஷ்ட ஈடும் வழங்கவேண்டும் என்றனர். என்ன வன்முறை என்பதே தெரியாமல் கைது செய்யப்பட்டோரும் உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x