

திருப்பூர்: மின்சார சட்டத் திருத்த மசோதாகண்டனத்துக்குரியது. மின்சாரத்தை தனியார் மயமாக்கும் முடிவால், தொழில்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திருப்பூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூரில் நடந்து முடிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாட்டில் 101 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியில் அனைத்து பதவிகளும் போட்டியின் மூலமே நிரப்பப்படுகின்றன.
கட்டுப்பாட்டுக் குழு
கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்படாத வகையில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 7 பேர் கொண்ட கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராக திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், பாஜகஆட்சியை அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரவும், வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். மின்சார சட்டத்திருத்த மசோதா கண்டனத்துக்குரியது. மின்சாரத்தை தனியார் மயமாக்கும் முடிவால், தொழில்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அக்னிபாத் திட்டம் மூலம், ராணுவத்தை ஆர்எஸ்எஸ்-ஆக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. தற்போது பிஹார் மாநிலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது.
பாஜகவை விட்டு மாநில கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கிவிட்டன. பாஜக அல்லாதமாநிலங்களில் மாநில கட்சிகள், பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை பலவீனப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.