Published : 11 Aug 2022 07:05 AM
Last Updated : 11 Aug 2022 07:05 AM

சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல்தலை கண்காட்சி: தெற்கு ரயில்வே தலைமையகத்தில் தொடங்கியது

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் 2 நாள் அஞ்சல்தலை கண்காட்சி நேற்று தொடங்கியது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் 2 நாள் அஞ்சல்தலை கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில், இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களுடன் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சியின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய சிறப்பு தலைகள், சிறப்பு உறைகள், பட அஞ்சல், பிற அஞ்சல் எழுதுபொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில், 194 அஞ்சல் தலைகள், 85 முதல் நாள் அஞ்சல் உறைகள், 113 சிறப்பு உறைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வைகை விரைவு ரயில் சேவை தொடங்கியதன் நினைவு அஞ்சல்தலை மற்றும் சிறப்பு அஞ்சல் உறை, நீலகிரி மலை ரயில், மற்ற யுனெஸ்கோ பாரம்பரிய ரயில்வே இடங்கள், ரயில்வே சிக்னல் முறை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே தலைமையகத்தின் நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டதன் நினைவாக, அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் நாள் கண்காட்சி இன்று நடைபெறுகிறது. கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x