

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்தியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு விதமான பயிர்கள் வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது, தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் இழப்பீடு பெற்று வந்தனர். இதில், வட்டாரம் மற்றும் பிர்கா வாரியாக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெறும் நிலை இருந்தது. இதனால், விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் முற்றிலும் விளக்கி கொள்ளப்பட்டு, பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் மாவட்டத்தில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வருவாய் கிராமத்துக்கு 4 வீதம், பயிர் அறுவடை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் பயிர் இழப்பீடு கணக்கிடப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனம் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. காப்பீட்டு தொகையாக ஒரு ஏக்கர் நெற் பயிருக்கு ரூ.333-ம், உளுந்து, பாசி பயறு போன்றவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.180-ம், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.1,680-ம், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.195-ம், வாழை ஏக்கருக்கு ரூ.2,185 என காப்பீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பா நெல் சாகுபடிக்கு காப்பீடுசெய்ய நவம்பர் 30-ம் தேதியும்,இதர பயிர்களுக்கு 2017 ஜனவரி15-ம் தேதியும் கடைசி நாட்களாகும். மேலும், விவரங்களுக்கு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம். காப்பீடு செய்வதற் கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வங்கி சலான்களை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது.