Published : 10 Aug 2022 04:10 AM
Last Updated : 10 Aug 2022 04:10 AM

அரக்காசனஅள்ளி நடுநிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள்

அரக்காசன அள்ளி நடுநிலைப் பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தின் உட்புற தோற்றம்.

தருமபுரி

பென்னாகரம் அருகே அரக்காசனஅள்ளி நடுநிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள அரக்காசனஅள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் வனத்துறை மூலம் 2003-ம் ஆண்டு கிராம வனக்குழு பயிற்சி மைய கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் உள்ளூர் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும் வகையிலும் இந்தக் கட்டிடம் அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், இங்கு அரிதாக மட்டுமே விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. இதற்கிடையில், இந்த கட்டிடம் படிப்படியாக சிதிலமடையத் தொடங்கியது. தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ள கட்டிடம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விபரீதம் எதுவும் நடக்கும் முன்பாக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது:

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் அவை உடனடியாக இடித்து அகற்றப்பட்டன.

அப்போது, அரக்காசன அள்ளி நடுநிலைப் பள்ளியில் உள்ள சிதிலமடைந்த கட்டிடம் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், இந்த கட்டிடம் வனத்துறையால் கட்டப்பட்டது என்பதால் எந்த துறை மூலம் இடித்து அகற்றுவது என்பதில் சிக்கல் நிலவுகிறது. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்குள்ளாக விபரீதம் எதுவும் நடந்து விடக் கூடாது. ஏனெனில், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு, மாணவ, மாணவியர் சிதிலமடைந்த கட்டிடத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

அதேபோல, பள்ளி வளாகத்தின் ஒருபகுதியில் மகளிர் சுய உதவிக் குழு அலுவலக பயன்பாட்டுக்கென அரசு மூலம் கட்டித் தரப்பட்ட கட்டிடம் ஒன்றும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை விரைந்து அகற்றி, பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x