Published : 09 Aug 2022 01:16 PM
Last Updated : 09 Aug 2022 01:16 PM

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுப்பது அநீதி: ராமதாஸ் 

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுப்பது அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட பிறகும் கூட, அதை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது நியாயமற்ற, ஏற்றுகொள்ள முடியாத செயலாகும்.

தமிழ்நாடு அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மீது ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப் படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஓய்வூதியர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளன. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுகளின் போதும் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இந்தக் கோரிக்கை நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்ததாதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் அகவிலைப்படி உயர்வை வழங்க போக்குவரத்துக் கழகங்கள் மறுப்பது எந்த வகையில் நியாயம்?

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறி அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது. அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதற்காக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கும், பிற பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் இந்த அடிப்படை உரிமையை தமிழக அரசு மறுப்பது பெரும் அநீதி ஆகும்.

போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல. அவர்கள் குறைந்த ஊதியத்தில் தான் பணியாற்றுகின்றனர். அவர்களை விட போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் நிலைமை மிகவும் மோசம். அத்தகைய சூழலில் வாழ்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு மறுக்கக் கூடாது.

கடந்த 81 மாதங்களில் வாழ்வாதாரச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அகவிலைப்படியை உயர்த்தினால் தான் ஓய்வூதியர்களால் அதை சமாளிக்க முடியும். அதிகரித்து வரும் செலவுகளை பல்வேறு வருவாய் ஆதாரங்களைக் கொண்ட அரசாலேயே சமாளிக்க முடியவில்லை எனும் போது, எந்த வருவாய் ஆதாரமும் இல்லாத ஓய்வூதியர்களால் அதிகரித்து வரும் வாழ்வாதாரச் செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும்?

அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதால் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 80 ஆயிரம் மூத்த குடிமக்கள் கடந்த 81 மாதங்களாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவதால் சராசரியாக மாதம் ரூ.1500 மட்டுமே கூடுதலாக வழங்க வேண்டியிருக்கும்.

தமிழக அரசின் பட்ஜெட் மதிப்புடன் ஒப்பிடும் போது இது பெரிய சுமை அல்ல. எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை, நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x