Published : 27 Jun 2014 06:44 PM
Last Updated : 27 Jun 2014 06:44 PM

சங்கர நேத்ராலாயாவுடன் இணையும் இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரி

இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியின் (எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ) கண் மருத்துவ ஃபெலோஷிப் படிப்பு தேர்வு மையமாகச் செயல்பட சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராயல் மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவ தேர்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ராபர்ட் முர்ரே, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், தேர்வுக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.சக்கரவர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

எழுத்துத் தேர்வு (பாகம் ஏ), சிகிச்சை தேர்வு (கிளினிக்கல் எக்ஸாமினேஷன்-பாகம் பி), இறுதிப் பயிற்சி (பாகம் சி) ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்ட மொத்தம் ஆறு ஆண்டுகளை உள்ளடக்கிய "எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ கண் மருத்துவ ஃபெலோஷிப்'புக்கான தேர்வை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தும் வாய்ப்பை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை பெற்றுள்ளது.

கண் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, உயர்படிப்பான இந்த ஃபெலோஷிப்புக்கு ஆன்லைன் மூலம் ஏராளமானோர் பதிவு செய்கின்றனர். ஆனாலும் கூட, 39 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 27) இந்தத் தேர்வு முடிவடைந்தது. வரும் காலங்களில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை போன்று மேலும் பல மையங்களில் "எஃப்ஆர்சிஎஸ்-எடின்பரோ கண் மருத்துவ ஃபெலோஷிப்'பை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x