

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை பொருத்தப்பட்ட இரும்புக் கம்பம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், சாலையில் சென்ற 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
கத்திப்பாரா மேம்பாலம் அருகே, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்காக வழிகாட்டி பெயர்ப் பலகை பொருத்தபட்ட ராட்சத இரும்புக் கம்பம் உள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு சென்ற அரசுப் பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்தக் கம்பத்தின் மீது மோதியது. இதில் அந்தக் கம்பம் சாலையின் குறுக்காக விழுந்தது.
அப்போது, விமானநிலை யத்தில் இருந்து கிண்டி நோக்கிஇருசக்கர வாகனத்தில் சென்றதண்டையார்பேட்டை சண்முகசுந் தரம் (30) என்பவர் மீதும், கிண்டியில் இருந்து விமானநிலையம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மீதும் அந்த பெயர்ப் பலகை விழுந்தது.
இதில், சண்முகசுந்தரம் பலகைக்கு அடியில் சிக்கி, பலத்த காயமடைந்தார். அதேபோல, சரக்கு வாகனத்தில் சென்ற, மதுரவாயல் சத்தியநாராயணன் என்பவரும் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து பரமங்கிமலை போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பேருந்து ஓட்டுநர் ரகுநாத், நடத்துநர் சின்னையன் ஆகியோர் பரங்கிமலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதையடுத்து, ஓட்டுநர் ரகுநாத்தை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து சற்று குறைவாக இருந்தது. இதனால், விபத்தின்போது பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.