Last Updated : 08 Aug, 2022 07:13 AM

 

Published : 08 Aug 2022 07:13 AM
Last Updated : 08 Aug 2022 07:13 AM

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தர வேண்டும்: மதுரையில் நடந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம்

மதுரையில் நடந்த சமூகநீதி மாநாட்டில், பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்பின் தலைவரும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.பி.ரத்தினசபாபதி பேசினார். உடன் பல்வேறு சமுதாய தலைவர்கள். படம்: என்.தங்கரத்தினம்

மதுரை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாநில அளவிலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாடு மதுரை விமானநிலையம் அருகே நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினர், சீர்மரபு அமைப்பினர் என மொத்தம் 261 சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாட்டுக்கு வீரசைவப் பேரவைத் தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ரஜினி வரவேற்றார். சீர்மரபினர் நலச்சங்கத் தலைவர் ஜெபமணி, பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்பின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.பி. ரத்தினசபாபதி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் வீரமங்கை மாயக்காள் நலஅறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சமுதாயத் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிற்பட்டோர் நல சமூக அமைப்பின் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ரத்தினசபாபதி பேசியதாவது: எதிர்காலத்தில் நாம் எந்த வேலை வாய்ப்புகளையும் பெற முடியாத சூழல் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அம்பாசங்கர் கமிஷன் அமைத்தது தவறு. அந்த கமிஷன் வழங்கும் புள்ளி விவரங்கள் தவறாக உள்ளன என்றார்.

பிற்பட்டோர் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசும்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியம் என நீதிமன்றம் கூறியதால் நாம் தற்போது இந்த மாநாட்டை நடத்த வேண்டிய நிலை. 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதை நீக்கி மக்கள்தொகை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை கடந்த 90 ஆண்டுகளாக நடத்தாததால் ஓபிசி மக்களுக்குரிய கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களில் உரிய பங்கு கிடைக்கவில்லை. 2021-ல் நடத்த வேண்டிய காகிதமில்லா கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி புள்ளிவிவரங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழக அரசு புள்ளிவிவர சேகரிப்புச் சட்டம் 2008-ன் படி சாதிவாரி, சமூக, கல்வி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் பிசி, எம்பிசி, டிஎன்டி, எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கு வழங்கப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.

மத்திய அரசு 2011-ல் நடத்திய சாதிவாரி சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை உடனே வெளியிட வேண்டும்.

50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி அனைத்து சமூகத்தினருக்கும் உரிய வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சட்டவிரோதமாக முன்னேறிய வகுப்புக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்ட 100 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x